சல்மான், கோவை
புறப்படும் போது
முதலில் வீட்டை விட்டு வெளியே போகும் போதே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து செல்ல வேண்டும். ஏனென்றால் நாம் போகும் இடங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அல்லாஹ்வை பொறுப்பாளனாக்கி செல்வதே சிறந்தாகும்.
நபி(ஸல்)அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது துஆச் செய்து செல்வார்கள்.
பிஸ்மில்லாஹி ரப்பி அவூது பி(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய என்று வீட்டைவிட்டு வெளியேறும் போது கூறுவார்கள்.
நூல்: நஸயீ 5391,5444 (
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்).என் இறைவா! நான் சருகி விடாமலும் வழிதவறிவிடாமலும் அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும்,(பிறரை)மூடனாக்காமலும்,இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
பெண்கள் வெளியே செல்லும் போது
பொதுவாக இன்றைய பெண்கள் வெளியே செல்லும் போது முகத்திற்கு பவுடர், உதட்டிற்கு சாயம்,தலை நிறைய மல்லிகை பூக்கள் என தன்னை முழுமையாக அலங்கரித்துக் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பெண்கள் வெளியே செல்லும் போது தன்னை அழகு படுத்தக்கூடாது என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
(அல் குர்ஆன் 24:31)
முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல் குர்ஆன் 33:59)
தண்ணீர் பிடிக்கும் இடம்
பொது பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது வரும் சண்டையைக் கவனித்தால் காது கொடுத்து கேட்க முடியாது. அந்த அளவுக்கு கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளை சர்வசாதாரணமாக முஸ்லிம் பெண்கள் பேசுகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக ஓராயிரம் பொய் பேசுகின்றனர். அது மட்டுமல்லாமல் கண்ணிலே சாடை செய்து மற்ற பெண்களைக் கேலி செய்கின்றனர். இந்தச் செயலை அல்லாஹ் கண்டிக்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கே- செய்ய வேண்டாம்.இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக்கே- செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறைகூறவேண்டாம். பட்டப்பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கைகொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
(அல்குர்ஆன் 49:11)
அநீதி இழைக்கப்பட்டவன் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதைஅல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:148)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (6018)
தள்ளுவண்டிக்காரனிடம் துள்ளி பேசும் பெண்கள் - பஜார் கடைகளும் பசாங்கு வார்த்தைகளும்
காய்கறி,
மீன், துணிகள்,போன்றவற்றை விற்க வரும் ஆண்களிடம் 5 ரூபாய் குறைக்க வேண்டும் என்பதற்காக வளைந்து குழைந்து பேசுவதைப் பார்க்கலாம். வெகுநேரம் சிரித்து பேசும் பெண்களையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. இவையெல்லாமே பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களாகும்.
கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் பெண்கள் அங்கு வேலைக்கு பெண்கள் உள்ளனரா என்று பார்ப்பது கிடையாது. ஒரு ஆண் மட்டும் உள்ள கடைக்குள் ஒரு பெண் தனியே செல்கிறாள். இவ்வாறு தனியே செல்லும் பெண்களிடம் ஒரு சில சபலம் கொண்ட கெட்ட ஆண்கள் இரட்டை அர்த்தத்தில் பேசியும், அந்த பெண்ணின் அழகை வர்ணித்து பேசவும் செய்து தன் வலையில் சிக்க வைத்து அந்த பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கப் பார்க்கின்றான். இது போன்ற இடங்களுக்குச் செல்ல நேரிட்டால் அல்லாஹ் திருமறை குர்ஆனில் கூறியதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
(அல்குர்ஆன் 33:32)
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிக்குச் சொல்லப்பட்டதாக இருந்தாலும் இந்த எச்சரிக்கை அனைவருக்கும் பொருந்தும்.
வீதியில் குழுமும் போது
ஆண்கள் ரோட்டில் செல்லும் போது ரோட்டை பட்டா எழுதி வாங்கியது போல் நடு ரோட்டில் நின்று பேசுவார்கள். போகிற வருகிற மக்களை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். குறிப்பாக பெண்கள் போனால் போதும் வச்ச கண் வாங்காமல் பார்த்து பெண்களைச் சங்கடப்பட வைப்பார்கள். இது போன்ற நிலை வராமல் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வீதியின் ஒழுங்குகளைக் கற்றுத் தருகிறார்கள்.
"நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் "எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவை தாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்அப்படி நீங்கள் அந்த சபைகளுக்கு வந்து தான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் "பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி),
நூல்: புகாரி 2465
மற்றொரு அறிவிப்பில் "அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி) ,
நூல் முஸ்லிம் 4365
இக்கட்டுரையில் சொல்லப்பட்ட இடங்களுக்கு அனைவரும் அன்றாடம் செல்வோம். எனவே இது போன்ற இடங்களில் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டி தந்த முறையில் நடந்து மறுவுலகில் வெற்றிபெறுவோம்.
0 கருத்துரைகள்:
Post a Comment